Tuesday, October 14, 2008

என்ன பொருத்தம்: தமிழீழம் Vs கொசோவா

    “ சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை”  இது ஒவ்வொரு  இந்தியனையும் தட்டியெழுப்பிய திலகரின் அறிவிப்பு.

இலங்கைத் தமிழர் படும் இன்னல்களுக்குத் தீர்வுகாணும் போது, உலகின் பிற பாகங்களில் நடைபெற்று வந்த அதே போன்ற நிகழ்வுகளுக்கு எவ்வாறு ஒரு நிரந்தரமான தீர்வு காணப் பட்டது என்பதனை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டியுள்ளது. அந்த வகையில் இன்றைய வெப் துனியா இணைய இதழில் வெளியான கட்டுரையில் இருந்து ஒரு பகுதி நம் அனைவரின் பார்வைக்கு.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பான விடயத்தில் கொசோவோவை பார்க்க வேண்டியதன் அவசியமென்ன? அவசியம் ஏதெனில், அந்நாட்டின் பிறப்பிற்கும் இலங்கையில் நடந்துவருவது போன்ற இன ஒடுக்கலே காரணமாகும்.

ஐரோப்பாவில் முன்பு யுகோஸ்லாவியாவின் ஒரு அங்கமாகவும், பிறகு செர்பிய குடியரசின் அங்கமாகவும் இருந்தது கொசோவோ பகுதி. அங்கு வாழ்ந்த அல்பானியர்க‌ள் அந்நாட்டின் பெரும்பான்மை (செர்பிய) இனத்தவர்களின் ஆதரவு பெற்ற செர்பிய அரசால் தொடர்ந்த இன ஒடுக்கலுக்கு ஆளாகிவந்த நிலையில், அதற்கு எதிராக நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திவந்த கொசோவோ, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுதந்திரப் பிரகடனம் செய்தது.


அதன் சுதந்திரப் பிரகடனத்தை இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பல நாடுகளும் அங்கீகரித்துவிட்டன.

கொசோவோ மக்களின் விடுதலை உணர்விற்கு வித்திட்டது மிலோவிச் தலைமையிலான கம்யூனிச- செர்பிய பேரினவாத அரசு. அதற்கு எதிராக முதலில் சாத்வீக வழியிலும், பிறகு ஆயுதமெடுத்தும் போராடிய அம்மக்களுக்கு அமெரிக்காவும், அதன் நோட்டோ கூட்டாளி நாடுகளும் ஆதரவாக நின்றன. அதன் காரணமாக கொசோவோ மக்களின் பிரச்சனை ஐ.நா. பாதுகாப்புப் பேரவைக்கு கொண்டு செல்லப்பட்டு, இன ஒடுக்கலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு கொசோவோ நாட்டிற்குள் சென்ற ஐரோப்பிய அமைதிப் படைகள், அல்பானியர்களை அழித்துக்கொண்டிருந்த மிலாசோவிச்சின் செர்பிய படைகளை வெளியேற்றின. அங்கு கொசோவோ மக்கள் தேர்ந்தெடுத்த நாடாளுமன்றமும், அரசும் நிறுவப்பட்டது.

10 ஆண்டுக்கால சுயாட்சிக்குப் பிறகு, தங்களுடைய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர நாடாக, தங்களுடைய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, பிரகடனம் செய்தது கொசொவோ அரசு.

இலங்கையில் பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும், தொன்றுதொட்டு அம்மண்ணில் வாழ்ந்துவரும் சிறுபான்மை இனமான தமிழர்களை கால் நூற்றாண்டிற்கும் மேலாக கொன்று குவித்துவருகிறது. அவர்களின் பாரம்பரிய பூமியில் இருந்து அவர்களை பலாத்காரமாக வெளியேற்றி சிங்களர்களை குடியமர்த்தி, அப்பகுதிகளின் பெயர்களையும் சிங்கள‌ப் பெயர்களாக மாற்றி வருகிறது.

சிறிலங்க அரசு நிர்வாகத்தில் தமிழர்களுக்கு இடமில்லை. அவர்களின் பாரம்பரிய பூமியில் வாழ்வுரிமை ப‌றிக்கப்பட்டு அனாதைகளாக ஆ‌க்கப்பட்டுள்ளனர்.

கொசோவோவில் எது நடந்ததோ அதுவே மிக உக்கிரமாக இலங்கையிலும் நடைபெற்று வருகிறது. அந்த மக்களுக்குத் தெளிவான தீர்வைத் தந்த உலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கும் அதே தீர்வை வழங்கிட வேண்டும்.

ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்களுக்குரிய வாழ்வுரிமையை உறுதிசெய்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆதரவளித்திட வேண்டும்.


அதற்கு முதற்படியாக சிறிலங்க அரசின் இனப் படுகொலையை நிறுத்தவும், தமிழர்களைப் பாதுகாக்கவும் ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

இலங்கையில் அமைதி ஏற்பட அனுசரணையாளராக பணியாற்றிய நார்வே நாடு, தனது ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் இணைந்து அம்முயற்சியை முன்னெடுக்க வேண்டும். அதனை இந்தியா ஆதரிக்க வேண்டும்.
 
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை, அந்நாட்டு அரசினாலும், அதன் உந்துதலின் பேரில் அந்நாட்டு இராணுவமும், காவல்துறையும் மேற்கொண்டுவரும் இன அழித்தல் நடவடிக்கையினாலும் கேள்விக்கு‌றியாகிவிட்ட நிலையில், அம்மக்கள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதே இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளின் தலையாய கடமையாகும்.
 
இந்த ஒரு வழியைத் தவிர, இலங்கைத் தமிழர்களைக் காக்கக்கூடிய வேறு வழி ஏதுமில்லை.
 
நன்றி: http://tamil.webdunia.com/

7 comments:

Unknown said...

நல்ல தொகுப்பு. தமிழீழம் - தனி ஈழம் ஒன்றே நிரந்தர தீர்வாகும்.

ஆட்காட்டி said...

ம்ம்ம்ம்ம்

வசந்தத்தின் தூதுவன் said...

// ஆட்காட்டி said...
ம்ம்ம்ம்ம்//

ஆட்காட்டி அய்யா வருகைக்கு நன்றி. ஆனா என்ன சொல்ல வந்தீங்கனுதான் தெரியலை.

வசந்தத்தின் தூதுவன் said...

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
நல்ல தொகுப்பு. தமிழீழம் - தனி ஈழம் ஒன்றே நிரந்தர தீர்வாகும்.//

பின்னூட்டம் பெரியசாமி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நம்ம கருத்தும் அதேதான்.

ஆட்காட்டி said...

நான் தமிழன். பிறகு என்ன சொல்ல வேண்டும்?

குடுகுடுப்பை said...

//பின்னூட்டம் பெரியசாமி.. said...

நல்ல தொகுப்பு. தமிழீழம் - தனி ஈழம் ஒன்றே நிரந்தர தீர்வாகும்.//

நம் கருத்தும் இதுவே. இல்லாட்டி சு.சாமி சொன்னது மாதிரி இந்தியா கூட இனைச்சுருங்க

வசந்தத்தின் தூதுவன் said...

வருகைக்கு நன்றி அய்யா. குடுகுடுப்பை அவர்களே..