Friday, December 2, 2011

ஊடகங்களுக்கு முன் உதார் விடும் கேரளா, நீதி மன்றங்களில் மண்டியிடுகிறது

தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்ட பின் புதிய அணைகளை விட வலுவாக்கப் பட்டுவிட்ட முல்லைப் பெரியாறு அணை பற்றி பலவகைகளில் புரளி கிளப்பி வந்த கேரள அரசு கேரள உயர்நீதி மன்றத்தில் குட்டிக்கரணம் (அந்தர்பல்டி) அடித்து விட்டது.






முல்லைப் பெரியாறு அணை பற்றி நேரடியாக அச்சுதானந்தன் தலைமையிலான கேரள அரசு சார்பில் கணிணி வரைகலை மூலம்  பீதியைக் கிளப்பும் அணை உடைவது போல போலிக் காட்சிகளை சித்தரித்து கேரள மக்கள் மனதில் பீதியையும், தமிழர்கள் மீது வெறுப்பையும் விதைத்தது.

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தொடர்ச்சியாக நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் பொய்ப்ப்ரப்புரை மேற்கொண்டது.

அணைக்கட்டுகள் நில அதிர்வை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இடுக்கி அணையுடன் ஒப்பிடும் போது முல்லைப் பெரியாறு அணை மிகவும் (கிட்டத்தட்ட 10 மடங்கு) சிறியது. இடுக்கி அணை கட்டப்படும் முன் அந்த பகுதியில் நில நடுக்கம் ஏதும் உணரப் படவில்லை. நிலநடுக்கத்தின் மூலகாரணமாக இருப்பது இடுக்கி அணையே தவிர முல்லைப் பெரியாறு அணையல்ல. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நில அதிவுகள் நான்கும் (நான்கு மட்டுமே, கேரளா சொல்வது 22 என்னும் பொய்க்கணக்கு) இடுக்கி அணையைச் சுற்றியே நிகழ்ந்துள்ளது. (தகவல்: Indian Metrological Department http://www.imd.gov.in/ , http://www.imd.gov.in/section/seismo/dynamic/welcome.htm )


முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் நில நடுக்கம் ஏற்படவேயில்லை என்பதே உண்மை...


கடந்த வாரம் அரசு வரி விலக்கு, சிறப்பு சலுகைகள், பினாமிகள் மூலம் நிதி உதவிகளை வாரி வழங்கி, முல்லைப் பெரியாறு உடைவது போல ஒரு கட்டுக்கதையை முழு நீள திரைப்படமாக தயாரித்து வெளியிட்டு அதன் மூலம் கேரள மக்கள் மனதி பீதியை திட்டமிட்டு உருவாக்கியது. இந்த திரைப்படத்தை தமிழகத்திலும் வெளியிடத்திட்டமிட்டதை ம.தி.மு.கவின் போர்ப்படை தடுத்து நிறுத்தியது.

ஆனால் கேரளாவில் வெளியானதையடுத்து அம்மக்கள் பீதியிலாழ்ந்தனர். எப்படியும் அணையை உடைத்தே தீர வேண்டும் இல்லையெனில் 35 லட்சம் மக்களும் அவர்களது உடைமைகள் அனைத்தையும் அடித்துச் சென்று அரபிக் கடலில் கலந்துவி்டும். கேரளாவே இரு துணடுகளாக மாறிவிடும் என போராட்டத்திலிறங்கினர்.



கேரள அரசு எதிர்பார்த்ததும் இதுதான். இது போல பீதி, உயிர் பயம், 35 லட்சம் உயிர், என தமிழகத்தை மிரட்டி பணிய வைத்து விடலாம் என திட்டமிட்டது.

ஆனால் “கொலைவெறி” பாடலை நாடு முழுவதும் பரப்பி பிரபலமாக்குவது, திகார் சிறையிலிருந்து கனிமொழியை வெளியே கொண்டு வருவது, வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்வது, பெங்களூர் நீதி மன்றத்தில் ஆயிரக் கணக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியது என முல்லைப் பெரியாறை விட முக்கிய அலுவல்கள் காரணமாக, மக்கள் இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

கேரளமும் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதைப் போல மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்தது. கேரள மக்கள் அனைவரும் ஆட்டுமந்தைகள் போல கூட்டம் கூட்டமாக அணைக்கு எதிராக திரண்டு போராட தொடங்கிவிட்டனர். ஆனால் அவர்களது இலக்கு என்ன எனவே தெரியாமல் போனதுதான் இதன் உச்ச கட்ட சோகம்.

கேரள அரசு அனைவரும் மயங்கி விடுவர் எனக் கருதி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு, பாதுகாப்பு கேரளத்திற்கு என்ற ஒரு முழக்கத்தை முன் வைத்தது. ஆனால் அது வெறும் முழக்கமாகவே முன் வைக்கப் பட்டதே தவிர, அதனைத் தமிழகம் பரிசீலிக்கும் வகையில் எந்த விதமான செயல் திட்டமும் அவர்களிடம் இல்லை.

புதிய அணையை அவர்கள் திட்டமிட்டுள்ள இடத்தில் கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது.




நீதிமன்றத்தில் இன்றைய வழக்கு முழுமையாக கேரள மக்களின் பாதுகாப்பைப் பற்றியது. கேரள உயர்நீதிமன்றம் அணை உடைந்தால் மக்களைப் பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது அவர்களுக்கே வினையாகிவிட்டது. ஆப்பசைத்த குரங்கு போல மாட்டிக் கொண்டு விழித்தது கேரள அரசு.

முல்லைப்பெரியாறின் முழு கொள்ளளவு 15 டி.எம்.சி நீர்தான் (152 அடிவரை தேக்கி வைத்தால்). இப்போது அணையில் 132 அடி மட்டுமே தேக்கிவைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 6 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது. இடுக்கி அணையின் கொள்ளளவு 10 -12 மடங்கு அதிகம். முல்லைப் பெரியாறு அணைக்கு வலுவில்லை உடைந்துவிடும், ஆனால் கேரள அரசால் கட்டப் பட்ட இடுக்கி அணை வலுவானது எனச் சொன்னால்,  35 லட்சம் மக்கள் உயிர் பற்றி கிளப்பி விட்ட புரளி பொய்யாகிவிடும். ஒருவேளை முல்லைப்பெரியாறு அணை உடைந்து இடுக்கி உடையவில்லை என்றால் உயிருக்கோ உடைமைகளுக்கோ பாதிப்பு இருக்காது.  இடுக்கி அணை உடைந்தால் தான் அவர்கள் எதிர்பார்க்குமளவுக்கு உயிரிழப்பும், பொருளிழப்பும் ஏற்படும். அப்படியென்றால் இடுக்கி அணையின் பாதுகாப்பும் கேளிவிக்குறியாக்கப்பட்டு விடும். ஒருவேளை நீதி மன்றம் இது போன்ற ஒரு
கருத்தை ஏற்றுக் கொண்டால் மக்களின் பாதுகாப்பு கருதி் இடுக்கி அணையின் நீரளவைக் குறைக்கும்படி உத்தரவிட்டு விட்டால் அவர்களது மின்னுற்பத்தி பாதிக்கப் பட்டுவிடும். நீதிமன்றத்தில் மின்னுற்பத்தியைக் காரணம் காட்டி மக்களின் உயிர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்க முடியாது. சொந்த செலவில் சூன்யம் வைத்ததன் மூலம் இப்படி ஒரு சிக்கலான சூழலில் இன்று
நீதி மன்றத்தில் மாட்டிக்கொண்டது.

நீதிமன்றத்தில் கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் உயர் நிதிமன்றத்தில் பின்வரும் கருத்துக்களை தெரிவித்திருப்பது முல்லைப்பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசு ஆடிவரும் நாடகம்வெளியே தெரிய வந்துள்ளது.

1. முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதில் இருந்து வரும் வெள்ள நீர் இடுக்கி அணையால் தடுக்கப்பட்டுவிடும். இடுக்கி அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் முழு அளவு வெள்ளம் வந்தாலும் தாங்கும்.

2. முல்லைப்பெரியாறு அணை உடையும் சூழல் ஏற்பட்டால் அதனால் வெறும் 450 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிவிட முடியும். மலையாள ஊடகங்கள்தான் மக்கள் மனதில் பீதியை உருவாக்கும் வேலையை திட்டமிட்டு செய்கின்றன.

இதன் மூலம் புரளி கிளப்பி அதன் மூலம் தமிழக உரிமையை தடுக்க நினைத்த கேரளாவின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. அணையால் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற சொத்தை வாதமும்அடிபட்டுப் போய்விட்டது.

இவ்வாறு பின்வாங்கியதின் பின்னணியில் வேறு வியூகங்களும் இருக்கக்கூடும். அவை எவையாக இருப்பினும் தகர்த்தெறிந்து முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை காக்க ஒவ்வொரு தமிழனும் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராட முன் வருவோம்.

Wednesday, November 16, 2011

அப்துல் கலாம் பற்றிய வைகோவின் பேச்சும் (வீடியோ இணைப்பு), ஊடகங்களின் திரிப்பும்..



கடந்த 10-11-2011 அன்று சென்னையில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுடைய கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது விழாவில் சிறப்புரையாற்றிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மறைமுகமாகத் தாக்கி பேசியதாக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. அப்துல் கலாமையே தாக்கிப் பேசி விட்டாராமே? அவ்வளவு பெரிய விஞ்ஞானியைத் தாக்கிப் பேசலாமா? என மக்கள் மத்தியில் ஒரு கருத்தை எழுப்புவதற்காகவே இந்த செய்தி பரப்பப் பட்டது.

உண்மையில் வைகோ அவர்கள் அப்துல் கலாமின் தொழில் நுட்ப அறிவைக் கேள்வி கேட்கவே இல்லை.

புத்தக வெளியீட்டு விழாவில் வைகோ பேசியது:





அப்துல் கலாமை தமிழ்நாட்டு மக்கள் அறியும் முன்னரே, அவர் அரசு ஊழியராக இருந்த காலத்திலேயே, கூடங்குளம் அணு உலையை அறிமுகப் படுத்துகையிலேயே, தொலை நோக்குப் பார்வையோடு அதனைக் குறித்த தொழில் நுட்பங்கள் சார்ந்த கேள்விகளை  1988 லியே  நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து அணு உலை மூலமாக மின்சாரம் தயாரிப்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் வைகோ அவர்கள் மட்டுமே. அப்போது அப்துல் கலாம் அனேகமாக வெறும் விமானயியல் பேராசிரியராக மட்டுமே இருந்திருக்கக் கூடும்.

அந்த கால கட்டங்களில் இப்போது இருக்குமளவிற்கு ஊடகங்களோ, கணிணி இணையதள வளர்ச்சியோ இல்லாத காரணத்தால், அணு உலையையும் ஏதோ சாதாரண தொழிற்சாலை எனக் கருதிக் கொண்டு, நம்மூருக்கு தொழிற்சாலை வந்தால் எல்லாருக்கும் வேலை கிடைக்கும், நம் மாவட்டமே வளர்ச்சியடைந்து, பூத்துக் குலுங்கும் என்ற மனப்பான்மையோடு, அந்த அரக்கனை வரவேற்றவர்கள்தான் அதிகமானோர்.

உண்மையில் அப்துல் கலாமின் பெயரிட்டு பக்கம் பக்கமாக வெளிவந்த அறிக்கைகள், அவரால் ஆய்வு செய்யப் பட்டு அவர் தயாரித்த அறிக்கையல்ல. மத்திய அரசின் மக்கள் தொடர்புத் துறையால் செமத்தியாக கவனிக்கப் பட்டு -மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த பாடலை படித்துக் காட்டி பரிசில் பெற வந்த தருமியைப் போல- வேறு சிலரால் தயாரிக்கப் பட்ட அறிக்கை அவர் பெயரில் வெளியிடப் பட்டுள்ளது.

அறிக்கை பற்றியும், அதில் இருக்கும் அபத்தங்கள் பற்றியும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயப் பட்டு விட்டதால், அறிக்கையிலே பின்வரும் கருத்தை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டால், வைகோ அவர்களது கேள்வி எவ்வளவு பொருத்தமானது என்பது விளங்கும்.

”கரிகாலன் கட்டிய அணை ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் உறுதியாக உள்ளது அதுபோல கூடங்குளம் அணு உலையும் உறுதியானது”

அப்துல் கலாம் விமானயியல் விஞ்ஞானியாக இருந்தவர். அணு விஞ்ஞானியாக உருவெடுத்தவர். இந்த இடத்தில் கட்டடக் கலை நிபுணராகவும் அவதாரமெடுக்கிறார். இதைச் சொன்னால் கட்டடவியலைப் பற்றி நீயே பேசும் போது விஞ்ஞானியானவர் பேசக் கூடாதா என நம்மைப் பார்த்து பொங்கிவிடுவார்கள். ஆகவே அவர் எப்படிச் சொல்லலாம் எனக் கேள்வி கேட்கப் போவதில்லை. சொல்லட்டும் தாராளமாகச் சொல்லட்டும். ஆனால் மேற்சொல்லப் பட்ட இரண்டு கருத்துகளும்(அணைக் கட்டுக்கும், அணு உலைக்கும் சிறிதும் தொடர்பில்லையெனினும்) முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திற்கு நூறு சதம் பொருந்தி வருகிறது. முல்லைப் பெரியாறு அணைக்கட்டின் உறுதித் தன்மையை அகில இந்திய அளவில் புகழ் பெற்ற கட்டடக் கலை நிபுணர்களால் (நன்றாக கவனிக்கவும் விமானயியல் விஞ்ஞானியோ அல்லது அணு விஞ்ஞானி என்று கூறிக் கொள்பவரோ அல்ல) பரிசோதித்து சான்றளிக்கப் பட்டு, உச்ச நீதி மன்றத்தால் 152 அடிகள் வரை நீரைத் தேக்கிவைத்தாலும் அணைக்கு எந்தவித பாதிப்பும் நேராது என தீர்ப்பும் வழங்கப் பட்டுவிட்டது. ஆனால் கேரள அரசு மீண்டும் மீண்டும் அணையின் பாதுகாப்பைக் கேள்விக் குறிக்குள்ளாக்கி, மக்களிடம் பீதியை உருவாக்கி, அணையை உடைக்கத் திட்டமிட்டுள்ளது. அணை உடைக்கப் பட்டால், இப்போது இருக்கும் உயரத்தைவிட தாழ்வான பகுதியில் புதிய அணை கட்டப் பட்டாலோ தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் கிடைக்காது. அப்படி நேர்ந்தால் அப்துல் கலாம் பிறந்த மாவட்டமான ராமநாதபுரம் உட்பட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படும்.

எல்லா விஞ்ஞானிகளும் சொல்லிவிட்டபின் அப்துல் கலாம் அவர்கள் பெயரில் மாத்ருபூமியிலும், மலையாள மனோரமாவிலும் பத்துப் பக்கம், எட்டுக் கால அளவில் முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உறுதியானது, ஆகவே உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப் படுத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு வெளியிடச் செய்திருந்தால், அப்துல் கலாமின் கட்டடக் கலை அறிவை நாம் மெச்சலாம்.

ஆப்பிளுக்கு ஆப்பிளையும், அணைக்கட்டுக்கு, அணைக்கட்டையும் ஒப்பிடச் சொன்னது தவறா? அணைக்கட்டையும், அணு உலையையும் ஒப்பிடுவது விஞ்ஞானிக்கு தகுமா?

தான் பிறந்த மண் பாலைவனமாக மாறுவது குறித்தோ, பக்கத்து ஊரில் வாழும் மக்களை பக்கத்து நாட்டு ராணுவம் நாய்களைப் போல சுட்டுப் போடுவதையோ கண்டிக்க துப்பில்லாதவர், பல நூறு மைல்கள் தாண்டி வாழும் மக்களுக்கு பத்து அம்சத் திட்டம் போடுவதை யார் நம்புவார்கள்.

கூடங்குளம் விவகாரத்தில் அப்துல் கலாம் தனது தனிப் பட்ட கருத்தை வெளியிடும் உரிமை அவருக்கு உள்ளது. ரஷ்ய நாட்டு நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு எழுதிக் கொடுத்ததை அவர் பெயரில் வெளியிட அனுமதிக்கும் உரிமையும் அவருக்கு உள்ளது. மண்டபத்தில் சுந்தரரால் எழுதிக் கொடுக்கப்பட்டு தருமியால் வாசிக்கப்பட்ட பாடலில் பொருட்குற்றம் இருப்பதைச் சுட்டிக் காட்டும் உரிமை நக்கீரருக்கு இருந்தது போல, அவரது அறிக்கை தவறு எனச் சொல்லும் உரிமை அனைவருக்கும் உள்ளது.




நிறைவாக, மத்திய அரசு ஒப்பந்தத்தில் கட்டப் படும் கட்டிடங்களின் உறுதித் தன்மைக்கு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டிற்காக கட்டப்பட்ட விளையாட்டு மைதானங்களும், கூடங்களும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும் என்பதை அணு உலையின் உறுதித் தன்மை பற்றி அறிக்கை தரும் முன்பாக நினைவில் நிறுத்திக் கொள்வது சிறப்பாகும்.



Tuesday, November 15, 2011

நவம்பர் 17 மற்றும் 18 ம.தி.மு.க. போராட்டங்களும் மக்கள் தொடர்பும்..

வரும் நவம்பர் 17 அன்று சென்னையில் மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், மீண்டும் அவர்களைப் பணியிலமர்த்தி, பணி நிரந்தரம் கோரியும் மறுமலர்ச்சி நாயகன், வசந்தத்தின் தூதுவன் வைகோ அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மறுநாள் நவம்பர் 18 அன்று தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் புரட்சிப் புயல் வரலாற்று நாயகன் வைகோ அவர்கள் தலைமையில் உர விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து ஒருநாள் மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டமும் நடைபெறவிருக்கிறது.






முதல் நாள் சென்னை ஆர்ப்பாட்டம் ஒரு குறிப்பிட்ட (சுமார் 12000) எண்ணிக்கையிலான மக்களுக்கு தமிழக அரசால் இழைக்கப் பட்ட அநீதியைக் கண்டித்து நடைபெறுகிறது. மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் 1989-1991 ஒன்றுபட்ட தி.மு.க. (தி.மு.க மற்றும் ம.தி.மு.க) அரசால் நியமனம் செய்யப் பட்டவர்கள். இவர்கள் அனைவருமே தி.மு.க. ஆதரவானவர்கள் அல்லது பின்னாளில் அ.தி.மு.க அரசால் (1991-1996) பணி நீக்கம் செய்யப் பட்டு மீண்டும் தி.மு.க. ஆட்சியில் (1996-2001) பணி வழங்கப் பட்டதால் முழுமையாக தி.மு.க. ஆதரவாளர்களாக மாறிப் போனவர்கள். எப்போதெல்லாம் அ.தி.மு.க ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் பணி நீக்கம் செய்யப் படுவதும் மீண்டும் தி.மு.க. அரசு வரும் போதெல்லாம் மீண்டும் பணி வழங்கப் படுவதும் வழக்கமாகி விட்டது.

உண்மையில் இவர்களுக்காக முன்னாள் ஆளுங்கட்சியான திமுகவோ அல்லது இன்னாள் எதிர்க்கட்சியான தேமுதிகவோ போராட்டம் நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால் முன்னது தங்கள் கட்சியின் இளவரசி, தலைவரின் புதல்வியே ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டு சிறைப்பட்டவரை வெளியில் கொண்டு வர வழி தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றது. ஒட்டு மொத்த முன்னாள் அமைச்சர்களும் அவரவர் வசதிக்கேற்ற வழியில் ஊழல் செய்து சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் மக்களாவது, மக்கள் நலப் பணியாளர்களாவது என்று அவனவன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதில் மும்மரமாக உள்ளனர்.

பின்னதோ சட்டசபைக்கு ஏன் போகலைன்னு யாருமே கேக்கலைன்னாலும், தானே வலிய வந்து எல்லாரும் என்னையே கேக்கிறீங்களே? அவங்க போனாங்களா? அவங்கள யாராவது கேட்டீங்களா? அவங்க போகாததுனால நானும் போக மாட்டேன்னு பினாத்துது. நூலகம் மூடப் படும்னு சொல்லி, மூணு நாள் ஆனபிறகு நீதி மன்றத்தால் தடையே விதிக்கப் பட்டபிறகுதான் அண்ணனுக்கு தெளிஞ்சப்புறம் மைத்துனனிடம் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு ஒரு அறிக்கை விடுது. இனிமே எதாவது தேர்தல் வந்தா மட்டும்தான் வெளியிலேயே வரும் போல இருக்கு. வெயில் பட்டா கருத்துருவான்னு எவனும் மைத்துனர் சொல்லியிருப்பான்போல.

ஆனால் மக்கள் சக்தி இயக்கமான மறுமலர்ச்சி தி.மு.க இந்த பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. பாதிக்கப் பட்ட 12000 பணியாளர்களை மீண்டும் பணியிலமர்த்த வேண்டிமெனக் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது. வழக்கமாக சென்னையில் நடைபெறும் போராட்டங்களில் பெருமளவிலான ம.தி.மு.க கழகத்தோழர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். கட்சி சார்பற்ற பொது மக்கள் பெருமளவில் கலந்து கொள்வதில்லை. ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது சாலையில் பேரூந்துகளிலும், பிற வாகனங்களிலும் கடந்து செல்லும் மக்களில் பெரும்பாலானவர்கள் போராட்டத்தை ஒரு இடையூறு என்ற அளவில் தான் கவனிப்பார்களே தவிர அதன் நோக்கமோ, விளைவுகளோ தெரிவதில்லை. ம.தி.மு.க நடத்தும் போராட்டங்களில் இம்மியளவும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்பது வேறு விடயம். ஆனால் வரும் நவ. 17 நடைபெற இருக்கும் போராட்டம் எல்லாப் பொது மக்களுக்குமான போராட்டமல்ல. இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு இழைக்கக் பட்ட அநீதியை திரும்பப் பெறவேண்டி நடத்தப் படும் போராட்டம்.

நீதி மன்றத்தில் பெறப் பட்டிருப்பது இடைக்காலத் தடை மட்டுமே. இந்தத் தடையினால் கிடைக்க இருப்பது இடைக்கால பணிதானே ஒழிய, நிரந்தரமான பணியல்ல. ஆகவே, அரசே முன்வந்து மீண்டும் பணி வழங்கினால் மட்டுமே அவர்களுக்கு பணி நிரந்தரமாகும். அதற்கான போராட்டத்தை ம.தி.மு.க.. முன்னெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தின் மூலம் பயன் பெறப் போகும் 12000 குடும்பங்களில் இருந்து குடும்பத்திற்கு ஒருவராவது கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொள்ள முடியாத நிலையிருந்தாலும் சென்னை மற்றும் சுற்றுப் புற மாவட்டங்களிலிருந்து சுமார் ஐயாயிரம் பேராவது கலந்து கொண்டால் இப்போராட்டம் பெரும் வெற்றி பெறும்.

இது போன்ற போராட்டங்களில் ம.தி.மு.க கழகத்தோழர்கள் கலந்து கொள்வது எந்த அளவுக்கு இன்றியமையாததோ அதை விட இன்றிமையாதது மக்கள் நலப் பணியாளர்கள் கலந்து கொள்வது. மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணியில் இணைந்திட, பணி நிரந்தமாகிட மக்கள் தலைவர் வைகோ பின் அனைவரும் அணிவகுப்பதே சிறந்தது என்பதை அனைவருக்கும் உணர்த்தி அவர்கள் முழுமையாக பங்கேற்கச் செய்ய வேண்டும்.

அது போலவே நவ. 18 ல் தஞ்சையில் உர தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு கண்டித்து நடைபெறும் உண்ணாநிலை அறப்போரில் வெகுவளவு விவசாயிகள் பங்குபெறச் செய்திட வேண்டும்.

பாதிக்கப் பட்டோர் மற்றும் பயன் பெறுவோரை அதிகளவில் கலந்து கொள்ளச் செய்வதன் மூலம் போராட்டத்தை பெரும் வெற்றியடையச் செய்ய முடியும். அதற்கு அனைத்து வகை ஊடகங்களையும் மக்கள் தொடர்பு சாதனங்களையும் பயன் படுத்தி மறுமலர்ச்சி தி.மு.க வின் போராட்டத்தின் நோக்கங்களையும், பயன்களையும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

நாளைய தமிழகத்தின் விடியல் வசந்தத்தின் தூதுவன் வைகோ வழியில்..