Friday, December 2, 2011

ஊடகங்களுக்கு முன் உதார் விடும் கேரளா, நீதி மன்றங்களில் மண்டியிடுகிறது

தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்ட பின் புதிய அணைகளை விட வலுவாக்கப் பட்டுவிட்ட முல்லைப் பெரியாறு அணை பற்றி பலவகைகளில் புரளி கிளப்பி வந்த கேரள அரசு கேரள உயர்நீதி மன்றத்தில் குட்டிக்கரணம் (அந்தர்பல்டி) அடித்து விட்டது.






முல்லைப் பெரியாறு அணை பற்றி நேரடியாக அச்சுதானந்தன் தலைமையிலான கேரள அரசு சார்பில் கணிணி வரைகலை மூலம்  பீதியைக் கிளப்பும் அணை உடைவது போல போலிக் காட்சிகளை சித்தரித்து கேரள மக்கள் மனதில் பீதியையும், தமிழர்கள் மீது வெறுப்பையும் விதைத்தது.

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தொடர்ச்சியாக நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் பொய்ப்ப்ரப்புரை மேற்கொண்டது.

அணைக்கட்டுகள் நில அதிர்வை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இடுக்கி அணையுடன் ஒப்பிடும் போது முல்லைப் பெரியாறு அணை மிகவும் (கிட்டத்தட்ட 10 மடங்கு) சிறியது. இடுக்கி அணை கட்டப்படும் முன் அந்த பகுதியில் நில நடுக்கம் ஏதும் உணரப் படவில்லை. நிலநடுக்கத்தின் மூலகாரணமாக இருப்பது இடுக்கி அணையே தவிர முல்லைப் பெரியாறு அணையல்ல. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நில அதிவுகள் நான்கும் (நான்கு மட்டுமே, கேரளா சொல்வது 22 என்னும் பொய்க்கணக்கு) இடுக்கி அணையைச் சுற்றியே நிகழ்ந்துள்ளது. (தகவல்: Indian Metrological Department http://www.imd.gov.in/ , http://www.imd.gov.in/section/seismo/dynamic/welcome.htm )


முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் நில நடுக்கம் ஏற்படவேயில்லை என்பதே உண்மை...


கடந்த வாரம் அரசு வரி விலக்கு, சிறப்பு சலுகைகள், பினாமிகள் மூலம் நிதி உதவிகளை வாரி வழங்கி, முல்லைப் பெரியாறு உடைவது போல ஒரு கட்டுக்கதையை முழு நீள திரைப்படமாக தயாரித்து வெளியிட்டு அதன் மூலம் கேரள மக்கள் மனதி பீதியை திட்டமிட்டு உருவாக்கியது. இந்த திரைப்படத்தை தமிழகத்திலும் வெளியிடத்திட்டமிட்டதை ம.தி.மு.கவின் போர்ப்படை தடுத்து நிறுத்தியது.

ஆனால் கேரளாவில் வெளியானதையடுத்து அம்மக்கள் பீதியிலாழ்ந்தனர். எப்படியும் அணையை உடைத்தே தீர வேண்டும் இல்லையெனில் 35 லட்சம் மக்களும் அவர்களது உடைமைகள் அனைத்தையும் அடித்துச் சென்று அரபிக் கடலில் கலந்துவி்டும். கேரளாவே இரு துணடுகளாக மாறிவிடும் என போராட்டத்திலிறங்கினர்.



கேரள அரசு எதிர்பார்த்ததும் இதுதான். இது போல பீதி, உயிர் பயம், 35 லட்சம் உயிர், என தமிழகத்தை மிரட்டி பணிய வைத்து விடலாம் என திட்டமிட்டது.

ஆனால் “கொலைவெறி” பாடலை நாடு முழுவதும் பரப்பி பிரபலமாக்குவது, திகார் சிறையிலிருந்து கனிமொழியை வெளியே கொண்டு வருவது, வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்வது, பெங்களூர் நீதி மன்றத்தில் ஆயிரக் கணக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியது என முல்லைப் பெரியாறை விட முக்கிய அலுவல்கள் காரணமாக, மக்கள் இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

கேரளமும் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதைப் போல மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்தது. கேரள மக்கள் அனைவரும் ஆட்டுமந்தைகள் போல கூட்டம் கூட்டமாக அணைக்கு எதிராக திரண்டு போராட தொடங்கிவிட்டனர். ஆனால் அவர்களது இலக்கு என்ன எனவே தெரியாமல் போனதுதான் இதன் உச்ச கட்ட சோகம்.

கேரள அரசு அனைவரும் மயங்கி விடுவர் எனக் கருதி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு, பாதுகாப்பு கேரளத்திற்கு என்ற ஒரு முழக்கத்தை முன் வைத்தது. ஆனால் அது வெறும் முழக்கமாகவே முன் வைக்கப் பட்டதே தவிர, அதனைத் தமிழகம் பரிசீலிக்கும் வகையில் எந்த விதமான செயல் திட்டமும் அவர்களிடம் இல்லை.

புதிய அணையை அவர்கள் திட்டமிட்டுள்ள இடத்தில் கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது.




நீதிமன்றத்தில் இன்றைய வழக்கு முழுமையாக கேரள மக்களின் பாதுகாப்பைப் பற்றியது. கேரள உயர்நீதிமன்றம் அணை உடைந்தால் மக்களைப் பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது அவர்களுக்கே வினையாகிவிட்டது. ஆப்பசைத்த குரங்கு போல மாட்டிக் கொண்டு விழித்தது கேரள அரசு.

முல்லைப்பெரியாறின் முழு கொள்ளளவு 15 டி.எம்.சி நீர்தான் (152 அடிவரை தேக்கி வைத்தால்). இப்போது அணையில் 132 அடி மட்டுமே தேக்கிவைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 6 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது. இடுக்கி அணையின் கொள்ளளவு 10 -12 மடங்கு அதிகம். முல்லைப் பெரியாறு அணைக்கு வலுவில்லை உடைந்துவிடும், ஆனால் கேரள அரசால் கட்டப் பட்ட இடுக்கி அணை வலுவானது எனச் சொன்னால்,  35 லட்சம் மக்கள் உயிர் பற்றி கிளப்பி விட்ட புரளி பொய்யாகிவிடும். ஒருவேளை முல்லைப்பெரியாறு அணை உடைந்து இடுக்கி உடையவில்லை என்றால் உயிருக்கோ உடைமைகளுக்கோ பாதிப்பு இருக்காது.  இடுக்கி அணை உடைந்தால் தான் அவர்கள் எதிர்பார்க்குமளவுக்கு உயிரிழப்பும், பொருளிழப்பும் ஏற்படும். அப்படியென்றால் இடுக்கி அணையின் பாதுகாப்பும் கேளிவிக்குறியாக்கப்பட்டு விடும். ஒருவேளை நீதி மன்றம் இது போன்ற ஒரு
கருத்தை ஏற்றுக் கொண்டால் மக்களின் பாதுகாப்பு கருதி் இடுக்கி அணையின் நீரளவைக் குறைக்கும்படி உத்தரவிட்டு விட்டால் அவர்களது மின்னுற்பத்தி பாதிக்கப் பட்டுவிடும். நீதிமன்றத்தில் மின்னுற்பத்தியைக் காரணம் காட்டி மக்களின் உயிர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்க முடியாது. சொந்த செலவில் சூன்யம் வைத்ததன் மூலம் இப்படி ஒரு சிக்கலான சூழலில் இன்று
நீதி மன்றத்தில் மாட்டிக்கொண்டது.

நீதிமன்றத்தில் கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் உயர் நிதிமன்றத்தில் பின்வரும் கருத்துக்களை தெரிவித்திருப்பது முல்லைப்பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசு ஆடிவரும் நாடகம்வெளியே தெரிய வந்துள்ளது.

1. முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதில் இருந்து வரும் வெள்ள நீர் இடுக்கி அணையால் தடுக்கப்பட்டுவிடும். இடுக்கி அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் முழு அளவு வெள்ளம் வந்தாலும் தாங்கும்.

2. முல்லைப்பெரியாறு அணை உடையும் சூழல் ஏற்பட்டால் அதனால் வெறும் 450 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிவிட முடியும். மலையாள ஊடகங்கள்தான் மக்கள் மனதில் பீதியை உருவாக்கும் வேலையை திட்டமிட்டு செய்கின்றன.

இதன் மூலம் புரளி கிளப்பி அதன் மூலம் தமிழக உரிமையை தடுக்க நினைத்த கேரளாவின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. அணையால் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற சொத்தை வாதமும்அடிபட்டுப் போய்விட்டது.

இவ்வாறு பின்வாங்கியதின் பின்னணியில் வேறு வியூகங்களும் இருக்கக்கூடும். அவை எவையாக இருப்பினும் தகர்த்தெறிந்து முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை காக்க ஒவ்வொரு தமிழனும் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராட முன் வருவோம்.

No comments: