Wednesday, October 15, 2008

எம்.பி பதவி ராஜினாமா, சர்வபரித் தியாகத்துக்கும், ஆயத்தமாக உள்ளோம்: வைகோ

மதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய தயார்.
'தமிழர் நலன் காக்கவும், ஈழத் தமிழர் இன‌ப்படுகொலையைத் தடுக்கவும், சர்வபரித் தியாகத்துக்கும் ஆயத்தமாக உள்ள ம.தி.மு.க.வுக்கு அதன் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பது ஒரு பொருட்டோ அல்ல'' எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது செயலாளர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுதொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், ''இலங்கையில் ஈழத் தமிழர்களைக் கொன்று ஒழிக்க திட்டமிட்டு, சிங்கள இனவாத அரசு தொடர்ந்து இனப்படுகொலை நடத்துவதைத் தெரிந்து கொண்டே இந்திய அரசு ஆயுத உதவி செய்து வந்துள்ளது. எனவே இது அண்டை நாட்டுக்கு நல்லெண்ண அடிப்படையில் செய்யப்பட்ட உதவி அல்ல, சிங்கள அரசுக்கு இராணுவ பலத்தைக் கூட்டுவதற்காகவே வழங்கப்பட்ட உதவி ஆகும்.

இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா இராணுவ உதவி செய்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங், அக்டோபர் 2ஆ‌ம் தேதியன்று எனக்கு எழுதியுள்ள கடிதம் ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவே உள்ளது. இலங்கை விமானப்படைக்கு வழங்கி உள்ள ரேடார்களை, இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இலங்கைக்கு அனுப்பி உள்ள இந்திய இராணுவப் பிரிவினரைத் திரும்ப அழைக்க வேண்டும்.

குறைந்த வட்டியில் மானிய உதவி போல இலங்கைக்கு வழங்குவதாகச் சொன்ன கடனை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும்.


இந்தியக் கடற்படையும், இலங்கைக் கடற்படையும் செய்து கொண்ட தகவல் பரிமாற்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

இலங்கை இராணுவத்துக்கும், விமானப்படையினருக்கும் இந்தியாவில் அளிக்கின்ற பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இலங்கை சிங்கள அரசு தன்னிச்சையாகவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ஒவ்வொரு நாளும், தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தி, பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருவதால், உடனடியாகத் தாக்குதலை இலங்கை அரசு நிறுத்திவிட்டு, போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.

அப்படி அறிவிக்குமாறும் சிங்கள அரசின் நடவடிக்கைகளால் முறிந்து போன அமைதிப் பேச்சுக்களை ஏற்கனவே நடுநிலைமையோடு கடமை ஆற்றிய நார்வே அரசை நடுவராகக் கொண்டு நடத்த வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்தைக் கொழும்பில் திறப்பதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு நிர்‌ப்பந்திக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் வற்புறுத்துவதோடு, இதைச் செய்வதற்கு சிங்கள அரசு முன்வராவிட்டால், இலங்கையுடனான ராஜிய உறவுகளை இந்தியா துண்டித்துக் கொள்ளும் என்றும், பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தும் என்றும், இந்திய அரசு இலங்கைக்கு எச்சரிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்வதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வராவிடில், அந்த அரசுக்குத்தரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவிக்க வேண்டும்.


ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்களவருக்கு ஆயுதங்களை வழங்கி துரோகம் செய்த இந்திய அரசின் குற்றத்துக்கு மத்திய அமைச்சரவைதான் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்வதற்கு உரிய நிர்‌பந்தத்தை மத்திய அரசு உடனடியாகச் செய்யாவிடில், அமைச்சரவையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.

தமிழர் நலன் காக்கவும், ஈழத்தமிழர் இனக் கொலையைத் தடுக்கவும், சர்வபரித் தியாகத்துக்கும் ஆயத்தமாக உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்துக்கு அதன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பது ஒரு பொருட்டோ அல்ல'' எ‌ன்று வைகோ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


நன்றி: வெப் துனியா
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0810/15/1081015025_1.htm

No comments: