வரவர தமிழ் பதிவுலகில் தனி மனித துதி மிகவும் தூக்கலாகப் போய்விட்டது. பதிவுகள் அனைத்தும் கருத்துக் களங்கள் தானே. இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களோ அல்லது ஒத்த கருத்துக்கள் உடையவர்கள் ஒரு குழுவாகவோ இருந்தது போய் இப்போது பதிவுலகில் கூட பின்பற்றிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
கருத்துக்களை
படைப்பாளிகள் - வாசிப்பவர்கள்
ரசிப்பவர்கள் - வெறுப்பவர்கள்
ஆமோதிப்பவர்கள் - மாற்றுக் கருத்துடையோர்
என்பதெல்லாம் போய் ஒரு சில பதிவர்களைப் பற்றி இவர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிஞ்சவர் என்று புகழ்வது துவங்கி இருக்கிறது.
இது எதற்காக? நல்லதா? கெட்டதா?
இப்படியே போனால் எங்கே போய் முடியும்?
இப்போது வலைபதிவுகள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் போது இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை என்பது போலத் தோன்றும். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு?
இன்னும் கொஞ்ச நாள் கழிச்ச பிறகு வலைப்பதிவு இல்லாத ஆட்களே இல்லை அல்லது வலைப்பதிவு இல்லாத மனிதர் அரை மனிதர் என்கிற நிலைமை வரப் போகின்றது! (கைப்பேசி வந்த புதிதில் அது இப்படி உலகை ஆக்கிரமிக்கும் என்று அதைக் கண்டுபிடிச்சவனே நினைச்சுக் கூட பார்த்திருக்கமாட்டான்). கலையுலக சூப்பர் ஸ்டார் கள் எல்லாம் கட்சி துவங்கி முதல்வர் பதவிக்கான களத்தில் இருப்பது போல, நமது வலையுலக சூப்பர் ஸ்டார்களும் கட்சி துவங்குவார்கள் போலத் தெரிகிறது. அப்படி துவங்கும் பட்சத்தில், இப்போது இவர்களைப் புகழ்ந்து வந்து கொண்டிருக்கும் பின்பற்றிகளின் பதிவுகள் அவர்களுடைய முதல்வர் பதவிக்கான தகுதியை சற்று தூக்கிக் கொடுப்பதாக அமையலாம். இப்போது புகழ்ந்து எழுதிக் கொண்டிருக்கும் பின்பற்றிப் பதிவர்கள் அமைச்சர்களாகவோ, வாரியத்தலைவர்களாகவோ, மாவட்டச் செயலாளர்கலாகவோ, வட்டம், ஒன்றியம் அல்லது வார்டு செயலாலர்களாகவோ வரும் வாய்ப்பு புகழ்ச்சியில் அவரவர் பங்களிப்பைப் பொறுத்து உள்ளது. சிறப்பாக புகழ்பவர்கள் அண்ணன் அஞ்சா நெஞ்சன் ஆர்க்காடு வீராசாமி போலவோ அல்லது குறைவாக புகழ்பவர்கள் 143 வார்டு கவுன்சிலர் அஞ்சா நெஞ்சன் டில்லி பாபு (இவரும் அஞ்சா நெஞ்சன்தான் ) போலவோ வரும் வாய்ப்பு உள்ளது.
இப்போது முதல்வர் பதவிக்கு போட்டி போடும் நடிகர்கள் எல்லாரும் நடிகர்கள் என்று மட்டும் பார்க்கப் படாமல் நல்லவர்களாகவும் சித்தரிக்கப் பட்டவர்கள் தான். ஒரு பக்கம் ஊடகங்களாலும் மறுபக்கம் ரசிகர்களாலும்.
ஆகவே வருங்கால முதல்வர்களே, ஆர்க்காடு வீராசாமிகளே, டில்லி பாபுக்களே..சீகிரமே துண்டு போட்டு இடத்தைப் பிடித்து கொள்ளுங்கள்.
துதி பாடும் கூட்டம் எனை நெருங்காதையா..
பின் குறிப்பு: வலையுலக முன்னோடிகள் இந்த இடுகை எந்த வகையை சார்ந்தது என்று தெரிவிக்கவும். சீரியஸா? இல்லை மொக்கையா? வயத்தெரிச்சலா? இல்லை வருங்காலக் கணிப்பா?
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Thursday, August 28, 2008
Subscribe to:
Posts (Atom)